3 இலட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு – நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீசலை விநியோகிக்க முடியாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, June 17th, 2022

மூன்று இலட்சம் 92 ஒக்டென் பெற்றோல் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளது.

42.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மக்கள் வங்கியினால் நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் – நாளொன்றுக்கு 3,000 மெட்ரிக் தொன் டீசல், 2,600 மெற்றிக் தொன் பெற்றோல் என்ற வரையறையில் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுடன் தற்போது கையிருப்பில் உள்ள டீசல் தொகையை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை முகாமை செய்ய முடியும். எனவே டீசல் விநியோகத்தை அவ்வாறே தொடர்ச்சியாக முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

கையிருப்பில் உள்ள பெற்றோலை 21 ஆம் திகதிவரை முகாமை செய்ய முடியாது. நேற்றுமுன்தினம் கூடிய அமைச்சரவை உபக்குழு நாட்டுக்கு அவசியமான பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய மேலும் 2 நிறுவங்களுடன் ஒப்பந்தங்களை செய்ய அனுமதி வழங்கியது.

அந்த நிறுவனங்களுக்கு நாணயக் கடிதங்களை விடுவிப்பது மக்கள் வங்கி ஊடாக இடம்பெறும். அந்த நாணய கடிதங்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், அடுத்த எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் திகதியை குறிப்பிட முடியும்.

மார்ச் மாதம்முதல் எரிபொருள் தொகையை எடுத்துக் கொண்டால் தங்களது கையிருப்பை விடவும் அதிக தொகை நாட்டின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களிடம் உள்ளது.

இதுதான் இருக்கின்ற பாரிய பிரச்சினையாகும். உதாரணமாக போக்குவரத்துத் துறையில் பெரும்பாலானோர் மண்ணெண்ணெயை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர்.

டீசல் விலை அதிகரிக்கும் போது பேருந்து கட்டணத்தை அதிகரிக்கின்றனர். ஆனால், மண்ணெண்ணெயை பயன்படுத்தி பேருந்துகளை இயக்குவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எரிபொருளை பங்கீட்டு (RATION) முறைக்கு வழங்கும் அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உதாரணமாக ஒரு வாரத்திற்கு 100 லீற்றருக்கான பங்கீட்டு அட்டை கிடைக்கும் நபருக்கு அதில் 60 லீற்றரினை பதிவு செய்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மற்றும் மீதமுள்ள 40 லீற்றர் எரிபொருளை நாட்டின் வேறு எந்தவொரு எரிபொருள் நிலையத்திலும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

000

Related posts: