2048 – பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு ஜனாதிபதிக்கு பல நாடுகளின் ஆதரவு – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, September 27th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவிததுள்ளார்.

சர்வதேச மாநாடுகள் மற்றும் அரச தலைவர்களின் சந்திப்புகளில் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைகளின் பலனாக குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்துக்கொள்ள அந்த நாடுகள் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் பசுமை முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும் Joint Crediting Mechanism (JCM) இந்தச் செயற்பாடுகளின் மைல்கல் இலக்காகும் என்றும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 101 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் –  ஜனாதிபதியின் காபன் கிரெடிட் திட்டம் உள்ளிட்ட சர்வதேச முயற்சிகளின் பலனாக, சிங்கப்பூருடனும் இலங்கை ஒப்பந்தத்தில் கைசாத்திட முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார். 

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைக்க சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஊடாக விவசாயிகள் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்க தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் கடந்த காலங்களில் மழை, வெள்ளம், வறட்சி போன்ற காலநிலை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட முறைப்படியே நிகழ்ந்தன. ஆனால் தற்போது காலநிலை மாற்றங்கள் கணிக்க முடியாத வகையிலேயே நிகழ்கின்றமையே காலநிலை மாறுபாட்டிற்கு முக்கிய காரணமென அறியப்பட்டுள்ளது. இந்த நிலை கட்டுக்கடங்காமல் போனால் மேலும் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கும்.

தொழில் புரட்சியுடன் ஏற்பட்ட புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது, குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம், காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது

இதன் மூலம், உலக வெப்பநிலை அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு, பல்வேறு நாடுகளின் தட்பவெப்ப மண்டலங்களில் பருவநிலை மாற்றங்கள், அதாவது அதிக மழை பெய்யும் பகுதிகளில் மழை மேலும் அதிகரிப்பது மற்றும் வறட்சி பகுதிகளில் வறட்சி அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தில் பெரும் மாற்றங்கள். நடக்கும்

இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இதன் தாக்கம் மிக அதிகம். சர்வதேச அளவில் ஒப்பிடும் போது புதைபடிவ எரிபொருள் எரிப்பு மற்றும் பச்சை வீட்டு வாயுக்கள் மீதான இலங்கையின் தாக்கம் மிகக் குறைவாக காணப்பட்டாலும்,  சுற்றுச்சூழலுக்கு எல்லைகள் இல்லாததால், பெரிய நாடுகளின் செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதன்படி, இந்நிலைமையை கட்டுப்படுத்தப்படாவிட்டால் 2090 ஆம் ஆண்டளவில்  யாழ். குடாநாட்டின் சில பகுதிகள் மூழ்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. உவர்நீர் மட்டம் அதிகரித்து விவசாயத்துறை  மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

.இதன்போது, காலநிலை மாற்றத்தைக் கையாள அவசியமான நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுடன் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிதிப் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை பலமான நாடுகளுக்கு இலங்கை உள்ளிட்ட சிறிய நாடுகள் வலியுறுத்தியிருந்தன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டிலும் ஏனைய சர்வதேச மாநாடுகளிலும் இது தொடர்பில் பெருமளவில் வலியுறுத்தியிருந்தார். பல வருட முயற்சிகளின் பலனாக டிசம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான மாநாட்டில், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச நிதியமொன்றை உருவாக்குவதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய, தேசிய காலநிலை மாற்ற சட்டத்தை தயாரிப்பதற்கான சகல வழிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கு முன்னுரிமை அளித்து, உலக நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டத்திலும் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இந்தச் செயற்பாடுகள் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுக்கப்படும் பட்சத்திலு முழுமையான நன்மைகளை அடைய முடியும். 

இந்த அனைத்து முதலீடுகளும் சுற்றாடல் பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றாடல் பாதுகாப்புக்கள் அதிகரிக்கும் அளவுக்கு காலநிலை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களின் தன்மைகளையும் குறைத்துக்கொள்ள முடியும். அதனை விவசாய, மீன்பிடி உள்ளிட்ட பல துறைகளுக்கும் கிடைக்கும் நன்மை எனவும் சுட்டிக்காட்ட முடியும் என்றும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: