2020 சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் அழைக்கலாம் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Friday, September 24th, 2021

வெளியாகியுள்ள 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 011 2 784 208, 011 2 784 537, 011 3 140 314 அல்லது ஹொட்லைன் எண் 1911 ஐ அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறலாம் என்றும் கல்வித் திணைக்களம் கூறியுள்ளது.

முன்பதாக 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்றையதினம் (23) இணையத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர்.

அதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களைப் பார்வையிட்டு, பரீட்சார்த்திகளின் சரியான பரீட்சை சுட்டெண்ணை அல்லது அடையாள அட் இலக்கத்தை உள்ளிட்டு முடிவுகளைப் பெற முடியும்.

இதனிடையே பல்வேறு மாணவர்கள் தங்களது பரீட்சை இலக்கத்தை மறந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறு பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி தங்களது பரீட்சை பெறுபேறுகளை பார்க்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு பரீட்சையின் அழகியல் பாடங்களின் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை. ஏனைய பாடங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின், அழகியல் பாடங்களில் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளும் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கு வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் இன்று விஷேட அறிக்கை அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: