20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறுவது உறுதி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!

Tuesday, October 20th, 2020

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம்.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்..

20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு நாம் வாக்குறுதியளித்து விட்டோம். அதேவேளை, புதிய அரசமைப்பும் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்துவிட்டோம்.

எனவே, இந்த இரு வாக்குறுதிகளையும் நாம் மீறவே முடியாது. முதலில் அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தையும் அதன்பின்னர் புதிய அரசமைப்பையும் நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். அந்தக் கருமங்களிலிருந்து நாம் பின்னிற்கப்போவதில்லை.

20 ஆவது திருத்தம் அவசியமற்றது என்ற மதத் தலைவர்களின் கோரிக்கையை நாம் கவனத்தில் கொள்கின்றோம். ஆனால், எமது ஜனாதிபதியையும் எமது அரசையும் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை நாம் ஏமாற்ற முடியாது.

20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள குழுநிலை விவாதத்தின்போதும் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இதன்போது உயர்நீதிமன்றத்தின் கட்டளையும் கவனத்தில் கொள்ளப்படும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி நாம் எதனையும் செய்ய முடியாது. ஆனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை. அதைத் தவிர்க்கும் வகையில் சட்ட வரைவில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


கூட்டுறவு திணைக்களத்தின் அக்கறையின்மையால் முற்றாக முடங்கியது கடற்றொழிலாளர் சமாசம் - ஊர்காவற்றுறை பிர...
காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதி...
நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அதிரடி உத்தரவு - வவுனியாவில் வாள்வெட்டு கலாசாரத்தை இல்லாதொழிக்க பொலிஸ...