20ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் !

Friday, September 4th, 2020

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அந்த வரைபு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள  முக்கிய விடயங்களாக –

19 ஆவது திருத்தத்தில் அதிகபட்சமாக 30 கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் இருந்து நீக்கப்பட்டு எத்தனை அமைச்சர்களையும் நியமிப்பதற்கு அமைச்சரவைத் தலைவரிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக இருப்பவர் எந்த அமைச்சையும் தன் வசம் கொண்டிருக்க முடியாது எனும் 19வதுதிருத்த சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி எத்தனை அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் தமக்கு கீழ் கொண்டிருக்கலாம் என்ற முக்கிய சரத்து 20வது திருத்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அவற்றுடன் 20வது திருத்தத்தில் சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நடைமுறைப்பாராளுமன்றம் அதன் அவதானிப்புக்களை மாத்திரமே அனுப்பிவைக்கமுடியும் .

சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளியிடப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் 19வது திருத்தத்தில் இருந்த 10 பேரைக் கொண்ட அரசியல்யாப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை உள்ளடக்கப்பட்டுள்ளது.

19வது திருத்தத்தில் இருந்த அரசியல்யாப்புப் பேரவையில் பத்து அங்கத்தவர்கள் இருந்தபோதும் புதிய பாராளுமன்ற பேரவை ஐந்து அங்கத்தவர்களைக்கொண்டதாக மாத்திரமே இருக்கும்.

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர், பிரதமரின் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் பிரதிநிதி ஆகியோரே புதிய பாராளுமன்ற பேரவையின் ஐந்து அங்கத்தவர்களாக இருப்பர்.

அரசியல்யாப்பு பேரவையில் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பேரவையில் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அந்தவகையில் திருத்த வரைபில் உள்ள முக்கிய சில விடயங்களாவன வருமாறு –

1.             ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2.             பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

3.             அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டுள்ளது.

4.             இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது.

5.             தேசிய பெறுகை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது.

6.             கணக்காய்வு சேவை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது.

7.             தேசிய பொலிசு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

8.             தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

9.             பாராளுமன்ற பேரவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10.           அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

11.           ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மை பாதிக்கப்படுகின்றது.

12.           சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான கால எல்லை ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

13.           பொதுமக்களுக்கு அறிவித்தல் இன்றி அவசர சட்ட மூலங்களை ஆக்குவதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

14.           பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்படும் சட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி பொதுசன அபிப்பிராயம் கோர முடியும்.

15.           ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான வயதெல்லை 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

16.           இரட்டை பிராஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்லலாம்.

17.           தேர்தல் ஆணைக்குழு தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்தலாம்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள்.

ஜனாதிபதிக்கு 19ஆம் திருத்தத்தில் இருந்த பின்வரும் கடப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன

1.             அரசியலமைப்பு மதிக்கப்பட்டு போற்றப்படுதலை உறுதிப்படுத்தல்.

2.             தேசிய நல்லினக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தல்.

3.             அரசியலமைப்பு பேரவை மற்றும் VIIஅ என்னும் அத்தியாயத்தில் குறிப்பீடு செய்யப்படும் நிறுவனங்களின் முறையான செயற்பாட்டை உறுதிப்படுத்தலும் வசதியளித்தலும்.

4.             தேர்தல் ஆணைக்குழுவின் மதியூரையின் மீது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களும் மக்கள் தீர்ப்பும் நடைபெறுவதற்கான உகந்த நிபந்தனைகள் உருவாக்கப்படுதலை உறுதிசெய்தல்.

5.             ஜனாதிபதி தன்னுடைய அதிகாரம் கடமை செய்றபாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

6.             ஜனாதிபதிக்கு எதிராக எவ்வித வழக்கு நடவடிக்கைகளையூம் மேற்கொள்ள முடியாது.

7.             ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைக் கூட தாக்கல் செய்ய முடியாது.

ஜனாதிபதிக்கு பின்வரும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

1.             பாராளுமன்றத்தை எந்நேரத்திலும் கலைப்பதற்கான அதிகாரம். ஆயினும் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடாத்தப்பட்ட பாராளுமன்றத்தினை ஒரு வருடம் முடிவுறும் வரை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது.

2.             ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வைத்திருக்க முடியும்.

3.             அமைச்சர்களின் எண்ணிக்கையில் ஜனாதிபதிக்கு மட்டுப்பாடு கிடையாது.

4.             பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கலாம் பதவி நீக்கஞ் செய்யலாம்.

5.             பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினை ஜனாதிபதி நியமிக்கலாம்.

6.             தேர்தல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கலாம். பதவி நீக்கஞ் செய்யலாம்.

7.             தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றிய ஒருவர் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.

8.             நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்களை நியமிக்கலாம். பதவி நீக்கஞ் செய்யலாம்.

9.             நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிக்கின்ற போது முதல் நிலை நியாயாதிக்க நீதிமன்றங்களில் கடமையாற்றிய அனுபவத்தினை பெற்ற நீதியரசரை நியமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.

10.           பொலிசு ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிக்கலாம். பதவி நீக்கஞ் செய்யலாம்.

11.           பொலிசு ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிக்கின்ற போது பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.

பாராளுமன்ற பேரவை

இது 05 அங்கத்தவர்களை கொண்டது.

இக் குழுவில்

1. பிரதமர்

2. சபாநாயகர்

3. எதிர்க்கட்சித் தலைவர்

4. பிரதமரினால் முன்மொழியப்படுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

5. எதிர்க்கட்சித் தலைவரினால் முன்மொழியப்படுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

இவர்களுள் 4, 5ம் நபர்கள் 1ம், 2ம், 3ம் நபர்கள் சார்ந்த சமூகங்கள் அல்லாத சமூகங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும்.

பாராளுமன்ற பேரவையின் கடமை

ஜனாதிபதியினால் பதிவிகளுக்கு நியமிக்கப்படவூள்ள ஆட்களும் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படுகின்ற ஆட்களும் தொடர்பான அவதானங்களை கோருகின்ற பொழுது அதற்கான அவதானங்களை சமர்ப்பிப்பது மாத்திரமே ஆகும். குறித்த அவதானங்கள் ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிக்கப்படவில்லையானால் ஜனாதிபதி நியமனத்தினை மேற்கொள்ளலாம்.

பதவிக்காலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலமாகும்.

பிரதமரினாலும் எதிர்க்கட்சித தலைவரினாலும் நியமிக்கபடும் நபர்கள் ஜனாதிபதியினால் நீக்கப்பட்டு வேறு நபர்களை நியமிக்கக் கோரலாம்.

அமைச்சரவை  19ம் திருத்தத்திற்கு முன்னரான நிலைக்கு மீளக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related posts: