வைத்தியசாலை ஊழியர் தாக்கிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
Sunday, July 24th, 2016
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிற்றூழியரை தாக்கி காயம் ஏற்படுத்திய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் என்.தம்பிமுத்து சனிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்
சனிக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர், ஆவரங்கால் மணற்றரை பகுதியில் இளைஞர்கள் சிலரை அழைத்து மதுவிருந்து ஒன்றினை வெள்ளிக்கிழமை (22) இரவு ஏற்பாடு செய்துள்ளார். இதன்போது, இளைஞர்கள் சிலருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர்காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்;.
வைத்திய சிகிச்சையின் போது அழைத்துவந்த ஏனைய நபர்களை வெளியில் நிற்குமாறு வைத்தியர் கூறியதுக்கு இணங்க, அங்கு கடமையில் இருந்த சிற்றூழியர் மதுபோதையில் நின்ற ஏனைய நபர்களை வெளியேற்ற முயற்சி செய்துள்ளார்.
மதுபோதையில் இருந்த இளைஞர்கள், சிற்றூழியரை தூக்கி நிலத்தில் அடித்துள்ளனர். இச்சம்பவத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தில்லை ரவிச்சந்திரன் (வயது 49) தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார் ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்திருந்தனர். கைதான இருவரையுமே நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Related posts:
|
|