7 ஆயிரம் போருக்கு வழங்கப்பட்ட நியமனத்தை நிறுத்த உத்தரவு!

Saturday, September 28th, 2019


பயிலுநா் செயல்திட்ட உதவியாளராக நாடுபூராகவும் 7 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட நியமனத்தினை ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில் இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப் பிரிய 25 மாவட்டச் செயலாளர்களிற்கும் பிறப்பித்துள்ளாா்.

இந்தநிலையில் குறித்த பணிப்புரையை மீளப் பெற்று தமக்கான நியமனத்தை உறுதி செய்யுமாறு பயிலுநர்களாக தேர்வானவர்கள் மாவட்டச் செயலகம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள கிராம சேவகர்களிற்கு உதவியாளர்களாகப் பணியாற்றும் வகையில் க.பொ.த உயர்தரத்துடன் பயிலுநர்களாக ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதற்காக கடந்த யூன் மாதம் முதல் கொழும்பில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.

இந்த நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் கடந்த 16ஆம் திகதி 7 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்கப்பட்டு பணிக்கமர்த்தப்படும் ஊழியர்களில் வடக்கு மாகாணத்திற்கும் 1440 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட 1440 பேரில் அதிக பட்சமாக யாழ் மாவட்டத்திற்கு 999 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு 105 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 144 பேரும் மன்னார் மாவட்டத்திற்கு 100 பேரும் வவுனியா மாவட்டத்திற்கு 92 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்..

இவ்வாறு நியமிக்கப்பட்ட பயிற்சிக் காலத்திற்கு மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் அக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படும் எனவும் வழங்கப்பட்ட நியமனத்தின் அடிப்படையில் புதிதாக நியமனம் கிடைத்தவர்கள் மிகவும் ஆவலாக நேற்றைய தினம் மாவட்டச் செயலகங்களில் தமக்கான கடமைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இவ்வாறு காத்திருந்தவர்களிடம் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்பே நியமனங்களை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பணிப்புரை அனுப்பி வைத்துள்ளதனால் தேர்தலின் பின்பே நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும் குறித்த நியமனத்தின் வகை , இதற்காக நேர்முகப் பரீட்சை இடம்பெற்ற காலம் , பெறப்பட்ட அனுமதிகள் என்பன தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

அவற்றின் அடிப்படையில் குறித்த நியமனத்தை வழங்குமாறு யாழ். மாவட்டத்தில் தேர்வானோர் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டது - ஜனாதிபதி ஊட...
நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு - தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் ...
எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் – எரிபொருட்களின் விலையும் இன்று அதிகாலைமுதல் அதிகரிப்பு - வரி...