முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் – ஜனாதிபதி!

Tuesday, June 4th, 2019


இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சகோதரத்துவத்துடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

நாட்டு மக்கள் ஒருவரையொருவர் குரோதத்துடனும், சந்தேகத்துடனும் நோக்கும் நிலை காணப்படும் வரையில் நாட்டில் ஐக்கியத்தினை கட்டியெழுப்ப முடியாது.

அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக நிராகரிப்பதோடு, சகல இன மக்களும் நியாயமான சமூகத்தில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

இதேவேளை, முஸ்லிம்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த தொடர்பான அறிக்கை ஒன்றினை தான் பெற்றுக்கொண்டுள்ளேன். கடந்த ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக 559 முஸ்லிம்கள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உரிய விசாரணைகளின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென” அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: