பலாலியிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவை மேற்கொள்ள சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் அனுமதி!

Sunday, August 4th, 2019


பலாலி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்திடம் (IATA) இலங்கை அரசாங்கம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மாகாணத்தில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக பணிகள் நடைபெற்றுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து பலாலியிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான பயணத்தினை இங்கிருந்து மேற்கொள்ள முடியும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாகவும் அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

இதுவொருபுறமிருக்க, பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (IATA) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முக்கிய நகரங்கள் மாத்திரமல்லாது வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை பலாலி விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தினையடுத்தே அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்திடம் (IATA அரசாங்கம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு, அனுமதி அளித்துள்ள அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம், பலாலி விமான நிலையத்துக்கான தனித்துவமான குறியீட்டான JAF என்பதையும், (IATA code JAF) வழங்கியுள்ளது.

இந்நிலையில் பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை விமான நிலையம் என்றே சர்வதேச விமான சேவைப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: