எமது நிலையறிந்து இறக்குமதி தடையை நீக்குங்கள் – அகில இலங்கை இருசக்கர வாகன உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

Tuesday, August 4th, 2020

மோட்டார் சைக்கிள் இறக்குமதியை இடைநிறுத்த அரசு பணித்துள்ளதால் வடக்கு மாகாணத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடுத்த ஒரு மாதத்தின் பின் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை பதிவுசெய்யப்படாத இருசக்கர வாகன விற்பனையாளர் சங்கத்தின் வடமாகாண பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் ஏற்பட்ட முடக்கநிலையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிநிலையை அடுத்து, கடந்த மே மாதம் தொடக்கம் வாகன இறக்குமதியை அரசு இடைநிறுத்தியது.

இந்த நிலையில் நாட்டில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகன இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதனால் மோட்டார் சைக்கிள் முகவர்களின் காட்சியறைகளில் மோட்டார் சைக்கிள்கள் முடிவடையும் நிலையில் அவை தற்காலிகமாக மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அகில இலங்கை பதிவுசெய்யப்படாத இருசக்கர வாகன விற்பனையாளர் சங்கம் வடமாகாணத்தின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

மோட்டார் சைக்கிள் இறக்குமதியை அரசு இடைநிறுத்தியுள்ளதால் அடுத்த ஒரு வாரத்துக்குள் மோட்டார் சைக்கிள் காட்சியறைகள் மூடப்படவுள்ளன.

இதனால் விற்பனை முகவர்கள் 90 பேர், 300 பணியாளர்கள் மற்றும் அவர்களைத் தங்கி வாழ்வோர் என 2ஆயிரத்து மேற்பட்டவர்கள் வடமாகாணத்தில் நேரடியாகப் பாதிக்கப்படவுள்ளனர்.

அத்தோடு  மேட்டார் சைக்கிள் சேவிஸ் நிலையங்களைச் சேர்ந்தோர் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்படவுள்ளனர்.

முகவர்கள் அனைவரும் வங்கிக் கடன்களை மீளச் செலுத்துவதில் பெரும் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதும் அவற்றின் இருப்பு முடிவடைந்துள்ளது. எனவே மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதித் தடையை அரசு நீக்கவேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை எமக்கு வழங்கவேண்டும். அரசினால் அனுமதி வழங்கப்பட்டாலும் சாதாரண நிலைக்கு மீள்வதற்கு இரண்டு தொடக்கம் மூன்று மாதங்கள் ஏற்படும் .

 ஆகவே தமது நிலை தொடர்பில் ஊடகங்கள் உரிய தரப்பினருக்கு தமது பக்க கோரிக்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்..

Related posts: