தரமான கல்வியே சிறந்த வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் – ஜனாதிபதி!

Friday, August 2nd, 2019

மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, சிறந்த தொழில்வாய்ப்புகளில் ஈடுபடுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தலை தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சம கல்வி உரிமையை வழங்குவதற்காகவே அனைத்து மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மாணவர்களின் எதிர்கால சாதனைகளை கருத்திற்கொண்டு கடந்த நான்கு வருட காலத்தினுள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

9 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தமிழ் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டார். நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

ஜனாதிபதி அவர்களின் வருகையை முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது. மலையக பட்டதாரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான தலையீட்டினை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts: