வடக்கை தமிழர்கள் உரிமை கோர முடியாது – சம்பிக்க
Wednesday, June 21st, 2017
வடக்கு மாகாணமானது தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும் வடக்கில் வாழ முடியும். ஆகவே வடக்கை தமிழர்கள் உரிமை கோர முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
சிங்கள பெளத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர் வடக்கில் தமிழர்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் வடக்கு மாகாணம் தனித்த மாகாணம் அல்ல. இலங்கையின் ஏனைய பகுதிகளை போலவே வடக்கும் அனைத்து தரப்பினரும் வாழ்ந்த ஒரு பூமியாகும். அவ்வாறு இருக்கையில் வடமாகாணம் மாத்திரம் தமிழர்களுக்கு சொந்தமான பூமியென கூற முடியாது. வடக்கில் யுத்தத்தின் போது ஏற்பட்ட நிலைமைகளே அங்கிருந்து சிங்கள, முஸ்லிம் மக்களை வெளியேற்ற காரணமாக அமைந்தன. வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. தமிழர்களுக்கு என வடக்கை உரிமை கேரா முடியாது. அங்கு சகல மக்களும் வாழ்ந்துள்ளனர். யுத்தத்தின் பின்னர் காணி விடுவிப்பு விடயத்தில் தமிழர் வாழ்ந்த இடங்களில் அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அங்கு சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் தைரியமாக செயற்பட உரிமை உள்ளது. மேலும் சிங்கள பெளத்த கருத்துக்களை இனவாதக் கருத்துக்களாக தெரிவித்து ஊடகங்களும் தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகளும் கூறுகின்றனர். ஆனால் தமிழர்களின், முஸ்லிம்களின் இனவாத கருத்துகள் வெளிவருவதில்லை. ஊடகங்களும் இனவாத கருத்துக்களை தவிர்த்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
எமது கருத்துகளை இனவாத கருத்தாக தெரிவிக்கும் நபர்கள் தமிழ் இனவாத கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டும். உண்மைகளை சரியாக தெரிவிக்க வேண்டும். வடக்கில் பரப்பப்பட்டு வரும் இனவாத கருத்துக்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. சிங்கள மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்களாக இருந்தாலும் சரி அல்லது அரச அதிகாரிகளாக இருந்தாலும் சரி எவர் இனவாதக் கருத்துக்களை பரப்பினாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனவாதிகளுக்கு சலுகைகள் இல்லை. நாட்டின் நல்லிணக்கம் என்பது சகல தரப்பினர் மூலமும் மேற்கொள்ளப்பட வேண்டும். மாற்றாக ஒரு சாராரை மாத்திரம் குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என்றார்.
Related posts:
|
|