ஜின்டெக் நிறுவனத்திற்கு அழைப்பாணை!

Thursday, April 21st, 2016

மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் டி.என்.ஏ அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காமை குறித்து விளக்கமளிப்பதற்கு, ஜின்டெக் நிறுவனத்தின் அதிகாரியை மே மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.

மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நெற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ‘ஏன் டி.என்.ஏ அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை?’ என்று நீதவான், குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த குற்றப்புலனாய்வு பொலிஸார், டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனம் இன்னும் அந்த அறிக்கையைத் தங்களிடம் தரவில்லையென கூறினர்.

அறிக்கை ஏன் இவ்வளவு காலதாமதமாகின்றது? என்பது தொடர்பில் விளக்கமளிக்க ஜின்டெக் நிறுவன அதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால், இந்தக் கொலை தொடர்பில் டி.என்.ஏ மற்றும் சான்றுப் பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைகள் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இச்சம்பவம் இடம்பெற்று எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: