வெளிமாவட்ட அசிரியர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

போக்குவரத்து வசதிகள் இன்றிய நிலையில் உள்ள வெளிமாவட்டப் பாடசாலைகளுக்கு கடமைக்குச் சென்று திரும்பும் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் இன்றும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவை தொடர்பில் வடக்குக் கல்வி அமைச்சும் மாகாணக் கல்வித் திணைக்களமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களை அச்சுறுத்தி எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று ஆசரியர்களைப் பயன்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.
ஆசிரியர்களின் சம்பள உயர்வுப் படிவங்களை வேண்டுமென்றே அனுப்பாது வைத்திருப்பதும், ஆசிரியர்களை மரியாதைக் குறைவான வார்த்தைகளால் கையாண்டு அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகளும் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடு ஆகும். புல மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு அதிகாலை தமது போக்குவரத்தை ஆரம்பித்து பல மணிநேரங்கள் போக்குவரத்துக்காக செலவழித்தே கடமைக்குச் செல்கின்றனர். அவ்வாறே வீடு திரும்புகின்றனர். காலை 7.30 மணிக்கு பிந்திச் செல்ல முடியாத அளவுக்கு கைரேகை இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. 1.30 மணிக்குப் பின்னர் ஆசிரியர்கள் மேலதிக நேரங்கள் பணியாற்ற வேண்டுமென்று எவரும் கோரமுடியாது. தாபன விதிக்கோவையும் அதனையே வலியுறுத்துகின்றது.
பாடசாலை நேரம் கல்வியமைச்சால் வரையறுக்கப்பட்டுள்ளது. கைரேகை இயந்திரத்தின் மூலம் வேலை நேரம் கணிப்பிடப்படுகின்றது. சில பாடசாலைகளின் அதிபர்கள் காலை 7.30 மணிக்கு கைரேகை இயந்திரத்தை செயலிழக்க வைப்பதும் மாலை 2 மணியின் பின்னரேயே கைரேகை இயந்திரத்தில் பதிவிடமுடியும் என்று ஆசிரியர்களை அச்சுறுத்தி செயற்படுவதும் அதிகார துஸ்பிரயோகம். இது வன்மையான கண்டனத்துக்குரியது.
பாடசாலை நேரம் தவிர மேலதிக நேரங்களில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்காமையால் கல்வி பாதிக்கும் என்னும் குதர்க்க நியாயத்தை நாம் நிராகரிக்கின்றோம் என்றுள்ளது.
Related posts:
|
|