வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள் – என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்து!
Saturday, July 15th, 2023வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(14) வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் –
வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அதிகளவான மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் சட்டரீதியாக செல்லாது, அங்கு சென்று பல இன்னல்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. வெளிநாட்டுக்கு அனுப்பவுதாக சட்டவிரோத நபர்கள் பணமோசடிகள் செய்கின்றனர். இவற்றை ஊடக செய்தியாக மட்டும் வெளியிடாமல், அமைச்சுக்கும் அது தொடர்பில் முறைப்பாடுகள் அளிக்கும்போதே நடவடிக்கை எடுக்க முடியும். அதனூடாகவே ஏனையவர்களையும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.
தென்மாகாணத்தில் மோசடிகள் பற்றி சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர். பாதிக்கப்பட்ட சம்பவங்கள், ஏமாற்றியவர்கள் தொடர்பில் பதிவுகளை வெளியீடுகின்றனர். ஆனால் வடமாகாணத்தில் அவ்வாறு செய்வது மிக குறைவு என்றார்.
அதேவேளை, தமிழில் உங்களோடு உரையாட முடியாதமைக்கு மனம் வருந்துகிறேன். அதற்கு நான் காரணமல்ல முன்னர் இருந்த அரசியல்வாதிகள் எங்களை பிரித்து விட்டார்கள்.
வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் நாம் சகோதரத்துவம் இல்லாமல் போனதற்கு அரசியல்வாதிகளே காரணம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படலை. இந்த பிரச்சனைக்கு காரணத்தை கண்டறியாமல், சர்வதேசத்திற்கும், மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கும் என ஏதோ சாட்டுக்களை கூறிக்கொள்கின்றனர்.
தற்போது ஜனாதிபதி இவற்றை தீர்க்கும் முகமாக வடபகுதி மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதவாதம், இனவாதம் என பிரிந்து வாழாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|