வெளிநாடு செல்பவர்களிற்கு யாழ் போதனாவில் இலவச பிசிஆர் பரிசோதனை – பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா இலங்கை கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்பவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் இலவசமாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகின்றது. அதேபோல யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த இரு தினங்களில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இது தொடர்பில் மக்களின் விழிப்புணர்வு மிக அத்தியாவசியமாக காணப்படுகின்றது.

அந்த வகையில் நமது வைத்தியசாலையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்திருக்கின்றோம். உதாரணமாக இப்பொழுது நமது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பெறுபவர்களுக்கு சத்திரசிகிச்சை கூடத்திற்று செல்வோர் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்த பின்புதான் அவர்களை சத்திர சிகிச்சைக்கான அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல விபத்து பிரிவில் வருபவர்கள் உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டி இருப்பின் அவர்களுக்கு பிசி ஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சிகிச்சைக்காக அனு மதிக்கிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தினமும் இவ்வாறானவர்களுக்கு 75 தொடக்கம் 100 பேருக்குபிசி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் நாளாந்தம் 400 பேருக்குரிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்தோடு வைத்தியசாலையில் விடுதிகளில் 5 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கப்படுவதுடன் இதன் மூலம் வைத்தியசாலையை கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாக இருக்கின்றது. பொதுவாக நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கை கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்பவர்களிற்கு யாழ் போதனா வைத்தியசாலையில் இலவசமாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாக தெரிவித்த பணிப்பாளர். விமான சேவை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அவர்கள் எமது பிசிஆர் பரிசோதனை அறிக்கையை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் யாழ் போதனா வைத்தியசாலையில் இலவச பிசிஆர் சோதனை மேற்கொள்ளலாம்.

அதேநேரம் சில விமான சேவை ரிக்கெட் முகவர்கள் பணத்தை அறவிட்டு பரிசோதனைக்கு எம்மிடம் அனுப்புவதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வெளிநாடு செல்பவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வெளிநாடு செல்லும் விமான ரிக்கெட், கடவுச்சீட்டை காண்பித்து இலவச பிசிஆர் சோதனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: