வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் – இராணுவதளபதி தெரிவிப்பு!

Wednesday, June 3rd, 2020

கொரோனா தொற்றுக் காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திர சில்வா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொதுமக்களிற்கு புதிதாக நோய் பரவுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் திட்டமொன்றை வகுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை நாட்டிலிருந்து முற்றாக இல்லாமல் செய்வதற்கான சிறந்த தந்திரோபாயத்தை உருவாக்கியுள்ள நாடு இலங்கை என்பதால் பல இலங்கையர்கள் இலங்கை திரும்பவிரும்புகின்றனர் என தெரிவித்துள்ள இராணுவதளபதி வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து இலங்கை உறுதியாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் எனினும் அழைத்து வரப்படுபவர்கள் அனைவரும் விமானநிலையத்தில் சோதனையிடப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சோதனையின் போது நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுபவர்கள் விமானநிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் சமூகத்துடன் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள இராணுவதளபதி பயணங்களின் போது வைரஸ் ஒருவரிடமிருந்து ஏனையவர்களிற்கு பரவலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறுவதற்கு முன்னரும் சோதனை செய்யப்படுவார்கள் அந்த சோதனை முடிவுகளை அடிப்படையாக வைத்தே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் மக்களை அழைத்துவரவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் எங்கள் பிரஜைகள் அவர்கள் அந்த நாடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்வதால் இங்கு வரவிரும்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அழைத்துவரப்படுபவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: