வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இலங்கையின் வீரர்கள் இல்லை : அமைச்சர் நாமல் கடும் விசனம்!

Friday, August 6th, 2021

இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்ட வேண்டுமென்ற  மனநிலையில் வீர,வீராங்கனைகள் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச, விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஒழுக்க விதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறிய அமைச்சர் நாமல்  ராஜபக்ச  மேலும் தெரிவிக்கையில் –

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளில் மூன்று பேர் மட்டுமே தகுதி காண் அடிப்படையில் தெரிவானவர்கள். ஏனையவர்கள் வைல்ட் கார்ட் அடிப்படையில் தெரிவானவர்கள்.

இவர்களில் தகுதிகாண் அடிப்படையில் தெரிவானவர்களுக்கு 30 இலட்சம் ரூபாவும் வைல்ட் கார்ட் அடிப்படையில் தெரிவானவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவும் பயிற்சியாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாவும் வழங்கினோம். இவர்களை சினமன் ஹார்டன் ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம்.

ஆனால் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டுவதற்கு உரிய மனநிலையில் வீர, வீராங்கனைகள் இல்லை. தேசிய மட்டத்தில் போட்டிகளில் வெற்றியீட்டுவதே அவர்களின் பிரதான இலக்காக உள்ளது.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய வீராங்கனை ஓடுவதற்காக பயன்படுத்தப்படும் பாதணியை வீட்டில் வைத்து விட்டுச் சென்றுள்ளார். எனவே விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஒழுக்க விதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் அணிந்திருந்த உடை தொடர்பில் சமூக வலையத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்சையான கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளோம். சில வீரர்கள் தாம் வழமையாக அணியும் உடையை அணிவதாக ஒலிம்பிக் குழுவிடம் கூறியுள்ளனர். அவ்வாறு இடம்பெற முடியாது. வீர, வீராங்கனைகளில் நடத்தை விதிகளே இதற்குக் காரணமாகும். இது தொடர்பில் நாம் உரிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். நடத்தை விதிகளை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும்நாம் ஜப்பான் சென்றது தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றது. ரொஷான் ரணசிங்க எம்.பி. தொழில் ரீதியாக ஜப்பான் சென்றார், அவரின்  பணத்தில் தான் நான் ஜப்பான் சென்றேன். நாம் அரசுக்கு செலவு வைப்பதில்லை.

இதேவேளை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றிகொள்ள ஒரு நாடு 10 முதல் 15 வருடங்கள் தயாராகின்றது. இம்முறை ஜப்பானும் அவ்வாறான தொரு முறைமையைப் பின்பற்றியே பதக்கங்களை வெற்றி கொண்டு வருகிறது.

எமது நாட்டில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேலைத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றிய மைக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அத்துடன் விளையாட்டுக் கவுன்சில் ஊடாக 2032 ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு திட்டமொன்றின் வழியாக இந்த இலக்கை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: