வீதிவிளக்கு பொருத்துவதில் பிரதேச சபை – மின்சார சபை இடையே இணக்கம்!

Friday, August 17th, 2018

வீதிவிளக்குப் பொருத்துவதில் பிரதேச சபைகளுக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதேச சபையின் பணியாளர்களைப் பயன்படுத்தி வீதி விளக்குகள் பொருத்துவதற்கு மின்சாரசபை இணங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையினருக்கும் பிரதேச சபையினருக்கும் இடையில் வீதிவிளக்குப் பொருத்துவதில் இழுபறி நிலை நிலவி வந்தது. இலங்கை மின்சார சபையினர் ஒரு வீதிவிளக்குப் பொருத்துவதற்கு ஆயிரத்து நூறு ரூபா அறவிடுகின்றனர் எனவும் உரிய காலத்தில் வீதி விளக்குகளைப் பொருத்தித் தருகின்றனர் இல்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. தம்மிடம் போதிய ஆளணி இல்லை என்று மின்சார சபையினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரதேச சபைகளிலுள்ள மின்சாரப் பணிபுரியும் பணியாளர்களைப் பயன்படுத்தி வீதிவிளக்குப் பொருத்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு மேற்பார்வையாளரை இந்தப் பணிக்காக அனுப்பவும் வீதிவிளக்குக்கு மின் இணைப்புச் செய்யப்படுவதற்கு முன்னதாக இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்க வேண்டும். மேலும் பிரதேச சபைகளிலுள்ள மின்சாரப் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் இலங்கை மின்சார சபையினால் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை பிரதேச சபைகள் வருமானத்தைப் பெற்று அவை உரிய நிலை அடையும் வரையில் இந்த நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: