வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிருங்கள் – பொதுமக்களிடம் பொலிசார் வலியுறுத்து!

Monday, June 27th, 2022

வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு பொலிசார் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக இவ்வாறு வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான துண்டு சீட்டை இன்றுமுதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் இணைந்து இந்த பணியினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எரிபொருளை விநியோகிக்கும் புதிய முறைமையின் அடிப்படையில், வாகன உரிமையாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடைமுறை இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது.

கிராம அலுவலர்கள், விவசாயம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக இவ்வாறு பதிவு செய்யப்படவுள்ளது.

அதேநேரம், எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 2 அமைச்சர்கள் இன்றையதினம் ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது 9,000 மெட்ரிக் டன் டீசலும், 6,000 மெட்ரிக் டன் பெற்றோலும் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

இந்தநிலையில், இன்றையதினம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து 10,000 மெட்ரிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடன் திட்டத்தின் அடிப்படையின் கீழ், எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: