விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளைத் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

Saturday, September 24th, 2022

தற்போது காணப்படுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை, கடன் பத்திரத்தை திறப்பதற்குள்ள சிரமங்கள், முற்கொடுப்பனவு முறையில் குறித்த பணச் செலுத்தல்களில் காணப்படுகின்ற மட்டுப்பாடுகளால் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்ளீடுகளை குறித்த காலத்தில் நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு இயலாமையால், விவசாயம் மோசமான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்யும் போது அவ்வாறான இறக்குமதிகளுக்குரிய குறித்த ஒவ்வொரு கொள்வனவுக் கட்டளைக்கும் பல்வேறு நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டியிருப்பதால், குறித்த இறக்குமதிகள் காலதாமதமாவதுடன், மேலதிக செலவுகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்கின்றவர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாய நடவடிக்கைகளைத் தங்குதடையின்றி மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில், அடையாளங் காணப்பட்டுள்ள விதைகள், கிருமிநாசினிகள் மற்றும் இரசாயனப் பசளை இறக்குமதியில் தற்போது காணப்படுகின்ற 50,000 டொலர் பணச்செலுத்தல் வரம்பை 250,000 டொலர் வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: