விமான நிலையம் திறக்கப்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Tuesday, July 14th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விமான நிலையத்தை தற்போது திறக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விமான நிலையத்தை திறக்கலாம் என விமான சேவைகள் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் கடந்த சில நாட்களில் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதுடன், மக்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் விமான நிலையத்தை திறப்பது நாட்டிற்கு மீண்டும் நெருக்கடிகளை உருவாக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக மோசமாக உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு பிரஜையேனும் நாட்டிற்குள் வந்தால், இலங்கையில் நிலைமைகள் மோசமடையும் என்றும் இலங்கையர்கள்கூட இப்போது நாட்டிற்குள் வருவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே இப்போதைய நிலையில் விமான நிலையத்தை திறப்பது சிக்கலான விடயம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்தே விமான நிலையத்தை தற்போது திறக்காதிருக்க சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts: