விளக்கமறியலிலிருந்த லண்டன் பிரஜா உரிமை பெற்ற நபர் மீது யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! 

Friday, June 10th, 2016

சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிரஜா உரிமை பெற்ற நபர் மீது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் இன்று வெள்ளிக் கிழமை (10-06-2016) தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த-6 ஆம் திகதி  திங்கட்கிழமை இரவு யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இலண்டனில் வசித்து வந்தவரும்,  வரணி குடமியன் பகுதியினைச் சேர்ந்த வேலாயுதம்பிள்ளை ரேணுகாரூபன் (வயது -35) என்ற நபரே தாக்குதலுக்கு இலக்கானவராவார்.

கடந்த ஜனவரி மாதம் குடமியன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் ஏற்கனவே நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தச்  சம்பவத்துடன் ஐந்தாவது சந்தேகநபராக மேற்படி நபர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் திரும்பிய நிலையில், கடந்த-01ஆம் திகதி பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்திருந்தனர்.

மறுநாள்-02 ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த மாதம்-17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலே சிறைச்சாலை அதிகாரிகளுடன் இவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அநாவசியமான சொற்களைப் பாவித்து முரண்பட்டுள்ளார்.இதன் காரணமாகவே சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டதாக சிறைச்சாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related posts: