விடுமுறை காலங்களில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் – உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பு!

Monday, April 11th, 2022

எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் போது கடைகளில் உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு விற்பனை விலையை நுகர்வோர் காணக்கூடிய வகையில் காட்டுவது கட்டாயமாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விடுமுறை காலங்களில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கும் என்றார். இம்மாதம் 2 இலட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அனாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொள்கலன்களில் எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

டீசல், பெற்றோல் போன்ற எரிபொருட்களை சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் அனைத்து இடங்களிலும் சேமித்து வைப்பதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வீடுகளில் உள்ள மண்ணெண்ணெய், டீசல் தொட்டிகளில் கலக்க வாய்ப்புள்ளது என எச்சரித்தனர். இது ஆபத்தான நிலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: