விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால் தகவல்களை வெளிப்படையாக கூறமுடியாது – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தெளிவின்மையால், சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுவதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் சில தரப்பினர் இந்த விசாரணைகள் தொடர்பில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், விசாரணைகள் தொடர்பில் முழுமையான விபரங்களை கூற முடியவில்லை எனவும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் நடத்திய தொடர் குண்டுத்தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்லவெனவும் அது நீண்டநாள் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டதை தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் உறதிப்படுத்துவதாகவும் அவர் நிகழ்த்திய விசேட உரையின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் எவரிடமாவது உறுதியான தகவல்கள் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளார்.

மேலும் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 46 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.  . இந்த தக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 311 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களின் எண்ணிக்கையும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாகும்.

அத்துடன் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுள் புத்தி ஜீவிகள் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இவர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. தாக்குதலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய பல தரப்புகள் இனம் காணப்பட்டுள்ளன.

ஆனாலும் தராதரம் பார்க்காது நாட்டின் சட்டத்திற்கு அமைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டுமானால் இதற்கு அடிப்படையாக இருந்த அனைத்து தரப்புக்களையும் கண்டறிய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஆரம்பத்தில் ஏற்பட்ட நிர்வாக ரீதியான குறைகளும், பொறுப்பற்ற பல சந்தர்ப்பங்களும் பதிவாகி இருக்கின்றன.

விசாரணை ஆழமாக மேற்கொள்ளப்படாமல் குறுகிய காலத்தில் அவற்றை நிறைவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

000

Related posts:

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்...
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
வடக்கின் நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலிய...