விசாரணைகளை விரிவுபடுத்தாது மறியலை நீடிப்பது சரியானதன்று – பொலிஸாருக்கு கடுந்தொனியில் நீதிவான் எச்சரிக்கை!
Saturday, June 2nd, 2018பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தாமல் திரும்பத் திரும்ப ஒரே அறிக்கைகளை நீதிமன்றுக்குச் சமர்ப்பித்து சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
இவ்வாறு யாழ்ப்பாண நீதிவான் மன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் யாழ்ப்பாண பொலிஸாரைக் கடும்தொனியில் எச்சரித்தார்.
கொக்குவிலில் அமைந்துள்ள கட்டடப்பொருள்கள் விற்பனை நிலையம் மீது கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதியன்று 10 மோட்டார் சைக்கிளில் வந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட கும்பலொன்று விற்பனை நிலையம் மீதும் அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் நடத்தியது.
இந்தக் கும்பலின் தலைவர் என்று கருதப்பட்டவரின் பிறந்தநாளை கொக்குவில் சந்திப்பகுதியில் கேக் வெட்டிக் கொண்டாட முயன்றமையே இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக அமைந்தது.
சம்பவம் தொடர்பாக எட்டுப் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நால்வர் தொடர்ச்சியாக நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் தொடர்பான வழக்கு சில நாள்களுக்கு முன்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வருவதால் அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரினர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட கண்காணிப்புக் கமராவின் காணொலிகள் அடங்கிய இறுவட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான அறிக்கை கிடைக்கும் வரை சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.
அதன்போதே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார். விளக்கமறியலில் வைப்பது சந்தேகநபரொருவருக்குத் தண்டனையாக அமையாது என்று கூறிய நீதிவான் இரண்டு சந்தேகநபர்களைப் பிணையில் விடுவித்து ஏனைய இருவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
Related posts:
|
|