வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்ல ஜனாதிபதி தலைமையில் உப குழு நியமனம்!

Tuesday, May 3rd, 2022

வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்கு ஜனாதிபதி தலைமையில் உப குழுவை நியமிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை உள்ளடக்கிய உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதேவேளை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் ஜூலை வரை நிதி உதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. நாலக கொடஹேவா தலைமையில் போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் திலும் அமுனுகம, எரிசக்தி அமைச்சர் மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வாவின் தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 09.09.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இக்குழுவின் ஆரம்ப அறிக்கை 25.04.2022 அன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக கீழ்க்காணும் அமைச்சர்களுடன் கூடிய உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல். பீரிஸ் தலைமையில் அரச பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்தினேஷ் குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நிதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: