வாள்வெட்டில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார்ச் சைக்கிள் வாங்கிக் கொடுத்த சித்தி கைது! 

Thursday, March 17th, 2016

தெருச்சண்டித்தனம், வாள் வெட்டுச்  சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த இளைஞனின் சித்தி இன்று வியாழக் கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தட்டாதெருச் சந்திப் பகுதியில்  இடம்பெற்ற வாள் வெட்டுச்  சம்பவம் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.

தட்டாதெருச் சந்திப் பகுதிக்கு அண்மையில்  அமைந்துள்ள மரக் காலை ஒன்றில் நின்ற இளைஞர்களை மோட்டார்ச்  சைக்கிளில் வந்த இளைஞர் குழுவொன்று நடு வீதியில் கலைத்துக்  கலைத்து வாளால் வெட்டிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது . மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் சகிதம் வந்த இளைஞர்கள் விறகு காளையில் நின்ற இளைஞர்களைப்  பலர் முன்னிலையில் துரத்தி துரத்தி வெட்டியது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த யாழ்ப்பாணம் பொலிஸார்  வாள் வெட்டில் ஈடுபட்ட கலட்டி மற்றும் உயரப்புலம் ஒழுங்கையைச்  சேர்ந்த இரு சமூக விரோத இளைஞர்களைக்  கைது செய்திருந்தனர்.  இச்சம்பவத்தில் வாளால் வெட்டிய சமூக விரோதக்  கும்பலைச்  சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு விட்டு விட்டு ஓடியுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார்ச்  சைக்கிளின் உரிமையாளரான இளைஞரைக்  கைது செய்யச்  சென்ற போது அவர் தலைமறைவாகியுள்ளார். இந் நிலையில் குறித்த  மோட்டார்ச்  சைக்கிளை வாங்கிக்  கொடுத்த பருத்தித்துறை வீதி நல்லூரினைச்  சேர்ந்த அவரது சித்தியை கைது செய்து இன்று யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: