வாக்களிப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்!

Friday, February 9th, 2018

நாளை சனிக்கிழமை நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ்க் காணும் அட்டைகளுள் ஒன்றை எடுத்துச் செல்லல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டை மேற்கூறப்பட்ட அட்டைகளில் ஏதேனுமொன்றை சமர்ப்பிக்காவிடின் வாக்கெடுப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டொன்று வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவில்லாத அடையாள அட்டைகள் (புகைப்படத்தின் மூலம் ஆளை அடையாளம் காண முடியாததாயின் அல்லது பெயர் வாசிக்க முடியாதவாறு அழிந்திருப்பின்) அமைச்சுக்களினால் அல்லது திணைக்களங்களினால் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கின்ற போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது புகைப்படம் இல்லாத வேறெந்ந ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: