வட்டிக்கு கொடுப்போருக்கு எதிராக வருகின்றது புதியசட்டம்!

Sunday, December 8th, 2019

வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி வழங்கவும் சட்டமொன்றை வரைய நிதியமைச்சுடன் இணைந்து மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி கொழும்பு பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்போரை விளம்பரப்படுத்தும் விதத்தில் டிஜிட்டல் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் இடம்பெறுகின்றதாகவும் அவற்றில் சில மோசடியென முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் வட்டிக்குப் பணம் கொடுப்போரை துன்புறுத்துவதாக ஏனைய முறைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், வாடிக்கையாளர் பற்றிய தகவலை நம்பிக்கையாகவும், இரகசியமான முறையிலும் பேணுவது மீறப்படுவதுடன், அதிக வட்டியென்ற முறைப்பாடுகளும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டக்கட்டமைப்பின் பிரகாரம் வட்டிக்கு கடன் கொடுப்போர் அனுமதிப்பத்திரம் மற்றும் ஒழுங்கமைப்புக்குள் வரவில்லை என்றும், இவர்கள் வைப்புகளை ஏற்கும் வரை இதற்குள் வரமாட்டார்கள் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனவே வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரைப் பாதுகாக்க அனுமதி வழங்கவும், ஒழுப்படுத்தவும் சட்டமொன்றை வரைய நிதியமைச்சுடன் இணைந்து மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது விரைவில் சட்டமாக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வட்டிக்கு கடன் கொடுப்போர் என்ற போர்வையில் மோசடியில் சிக்குவதை தவிர்க்குமாறு பொது மக்களை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. அத்துடன் கடன்பெற முன்னர் உரிய அவதானம் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறியப்படாத நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தகவல்கள் வழங்கல், வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்திடல், நிபந்தனை விதிமுறை தெளிவற்ற போது கையெழுத்திடல், பத்திரம் நிரப்பும் போது மூன்றாம் தரப்புக்கு இடமளித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts:

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவுக் கட்டடப் பணியை தொடர்வதற்கு அமைச்சரவை ...
ஐம்பது இலட்சம் உக்ரேனியர்கள், நாட்டில் இருந்து வெளியேறுவர் - ஐக்கிய நாடுகளின் கணிப்பு!
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை கோரியுள்ளது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச...