வடமராட்சியில் பெண் படுகொலை – திட்டமிட்ட செயலா என பொலிஸார் விசாரணை!

Monday, April 2nd, 2018

வடமராட்சி கிழக்கு அம்பனைப் பகுதியில் இளம் பெண் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

வடமராட்சி கிழக்கு அம்பனை பகுதியில் தனது தாயாருடன் வாழ்ந்துவந்த பெண்ணான நல்லதம்பி ரேவதி வயது 39 என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

நேற்றிரவு நித்திரையில் இருந்த சமயம் குறித்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுவதுடன் குறித்த பெண்ணின் தாயாரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இன்று காலை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த வீட்டில் கள் இறக்கும் தொழிலுக்காகச் சென்ற  ஒருவர் குறித்த வீட்டில் ஆள்களின் நடமாட்டம் இன்மையை அவதானித்து அயலவர்களுடன் இணைந்து வீட்டில் பார்த்தபோதே குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.

அத்துடன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் உயிருக்காகப்  போராடிக்கொண்டிருந்த மரணமடைந்த பெண்ணின் தாயாரும் மீட்கப்பட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

இதனிடையே குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட கொலையா அல்லது கொள்ளை முயற்சியின் போது கொலை செய்யப்பட்டதா என பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: