வடக்கு மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்க வாய்ப்பு!

Saturday, January 12th, 2019

வட மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கண்காட்சி குறித்து விளக்கமளிக்கும் வகையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகளைக் கொண்ட சுமார் 10 இற்கும் மேற்பட்ட தமிழக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம், 12 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கற்கைநெறியில் 30 தொடக்கம் 50 வீதம் வரையான கட்டணக் கழிவு வழங்கப்படுவதோடு, கண்காட்சியில் வைத்தே பல்கலைக்கழகங்களுக்கான உடனடி அனுமதியும் வழங்கப்படவுள்ளதாக இந்திய துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கண்காட்சியின்போது கற்கை நெறிகள் தொடர்பான விளக்கங்களுடன், பங்குபற்றும் மாணவர்களுக்கு எதிர்கால தொழில்வாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மொழி மூலமான மாணவர்கள் இந்தியாவில் கற்கை நெறிகளை தடையின்றி தொடருவதற்கு ஆங்கில மொழி விருத்தியினைத் தூண்டும் வகையில் கற்கை நெறிகளுக்கான ஆரம்பநிலை ஆங்கிலக் கற்கைகள் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்திய தூதரகமானது முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்தர் மேலும் தெரிவித்துள்ளர்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தினால் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில், மவுலானா ஆசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப் பரிசில், பொதுநலவாய புலமைப்பரிசில்கள் பட்டக்கல்வி முதல் முதுநிலை கல்வி வரை புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 25 திகதியாகும்.

புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் அது தொடர்பான மேலதிக விபரங்களை www.mohe.gov.lk என்ற இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், இவை தொடர்பான மேலதிக விளக்கங்களை அலுவலக நாட்களில் இந்தியத் துணைத் தூதரகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இந்திய துணைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் குறித்து இலங்கை மாணவர்களிடத்தில் போதியளவு விழிப்புணர்வு இல்லை என்றும் இந்திய துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts: