வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு – மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா வலியுறுத்து!

Thursday, December 14th, 2023

நாட்டில் தற்போது நிலவும் கன மழையுடனான காலநிலைக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை  மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே நாளை (15) காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் நாளைமுதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இக் காற்றுச் சுழற்சி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. எனினும் இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16.12.2023 க்கு பின்னரே உறுதியாக கூற முடியும்.

இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இக் கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இம்மழை 15.12.2023 முதல் 22.12.2023 வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் இக்கனமழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: