வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சம் பேர்வரை எந்தவொரு தடுப்பூசியையும் பெறவில்லை – உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து!

Monday, September 13th, 2021

வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்குமாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில் –

வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 5 இலட்சத்து 47 ஆயிரத்து 150 பேருக்கு 1ஆவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது வடமாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதமாகும்.

மேலும் 2 ஆவது தடுப்பூசி 4 இலட்சத்து  ஆயிரத்து 494 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 62 சதவீதமாகும். வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதிமுதல் வடமாகாணத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் இதுவரை மொத்தமாக 32 ஆயிரத்து 844 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 5 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேபோல வடமாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டடுள்ளன. இவற்றில் 228 இறப்புக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 169 இறப்புக்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும்போது பெரும்பாலான இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் கோவிட் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான பெருந்தொற்று சூழலிலே உயிரிழப்புக்களை குறைப்பதற்கு எம்மிடமுள்ள முக்கியமான உபாயம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே. தற்பொழுது வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்,என பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: