வடக்கில் யாழ் மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவு – டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு அதிர்ச்சி கூட்டத்தில் தகவல்!

Friday, December 15th, 2023

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று (14.12.2023) நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கணகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதார பணிமனைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாகவும், சூம் ஊடாகவும் கலந்துக்கொண்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், எனினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் காணப்படுவதாகவும் அந்ததந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும், சுகாதார துறைசார் அதிகாரிகளும் சூம் ஊடாக தெரிவித்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பிலும், டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதிகாரிகளால் ஆளுநருக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

அதற்கமைய, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறுஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் எனசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையங்களில் காணப்படும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் அறிவித்தல்களை வழங்க முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், சுற்றுசூழல் பாதுகாப்புக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கிராமிய மட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வாராந்த கிராமிய மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளை அரச வைத்தியசாலைகளில் மேம்படுத்துமாறும் ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் வடக்கு மாகாணத்திற்குள் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் கடமைபுரியும் அரச வைத்தியர்களும், டெங்கு காய்ச்சல் தொடர்பில் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும், உரிய வைத்தியர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: