வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை – யாழில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Sunday, February 28th, 2021

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் –

யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வர்த்தக சங்கங்கள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.

பனை அபிவிருத்தி தொடர்பிலும் ,அதேபோல் பனைஉற்பத்திகளை எவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

படகு கட்டுமானங்கள் தொடர்பாகவும் விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்ததோடு, அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து இருந்தோம். அத்தோடு இந்த இரண்டு துறைகள் மூலமே எமது நாட்டின் பொருளாதாரத்தை மேன்மேலும் அதிகரித்து செல்ல முடியும். தற்போது குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய சில திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம் என்றும் தெரிவித்த அமைச்சர் வட பகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது என்றும் முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வட பகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள் நடுத்தர முயற்சியாளர்களுக்கு நம்மால் ஆன உதவியையும் ஒத்துழைப்பினையும் வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் எமது பிரதேசத்தில் பொருளாதாரத்தை முன்னேற்ற செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள துறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரம் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சனையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது.

அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள் எனினும் அந்த தொழில் முயற்சியானது அந்த தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக சாத்தியப்படாததன் காரணமாக மக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நுண்கடன் தொடர்பான பிரச்சினை தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: