வடக்கில் சீரமைக்கப்படவுள்ள சுகாதாரக் கட்டமைப்புக்கள்!

Saturday, July 13th, 2019

இலங்கை அரசாங்கத்தால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கையானது கொழும்பில் கடந்த புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கடன் உடன்படிக்கையில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க கைச்சாத்திட்டுள்ளார்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கட்டம் இரண்டு அபிவிருத்தியின் முதலாவது படியான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய விசேட மகப்பேற்றியல் மையம் , வவுனியா பொது வைத்தியசாலையில் விசேட இதயவியல் மற்றும் நரம்பியல் மையம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உளநலப் பிரிவுடன் கூடிய மாற்றாற்றல் உள்ளவர்களுக்கான புனர்வாழ்வு மையம் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அவசர சேவைப் பிரிவு உட்பட வெவ்வேறு சிறப்பு வைத்திய மையங்கள் இவ் விசேட திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கை அரசினது இவ்விசேட வடக்குச் சுகாதார அபிவிருத்தித் திட்டத்திற்கான 75 வீதமான நிதி ஏற்றுமதிக் கடன் உதவியாக நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கியால் வழங்கப்படுகிறது.

இதன் எஞ்சிய 25வீதமான தொகை நெதர்லாந்து இராச்சியத்தின் அபிவிருத்தியுடன் தொடர்பான கட்டுமாண முதலீட்டு நிதியின் (Development Related Infrastructure Investment Vehicle- DRIVE) ஊடாக நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: