வடக்கில் அவசரகால நிலைமை ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயார் – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 29th, 2021

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை ஆயிரத்து 544 கொரோனா தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் இதுவரை 19 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்றையதினம் ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றதனடிப்படையில், தேசிய ரீதியில்  மற்றும் கோவிட் தடுப்பு செயலணியின் விதிமுறைகளுக்கு அமைய, தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அதில் சுகாதார வழிமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள், பிரச்சனைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தல், அதனை பின்பற்றாத நிலைமை காணப்படுவதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது

குறிப்பாக, சட்டவிரோத கடல் பயணங்கள். அதேபோல சட்டவிரோத தொடர்பாடல்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மீன்பிடி மக்களுக்கும் அத்தோடு கரையோரப் பகுதி மக்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில்  ஆராயப்பட்டது.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் ஆராயபட்டதோடு, தனிமைப்படுத்தல் நிலையங்களை தேவைக்கேற்ப அதிகரிப்பதற்குரிய விடயங்கள் தொடர்பிலும்  நெரிசல் மிக்க நகரப்பகுதிகளில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில போக்குவரத்து ஒழுங்குகள், சில மாற்றங்களை பின்பற்றுதல் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

வைத்தியசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறிப்பாக ஒக்சிஜன் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.  அதேநேரம் சகல வழிபாட்டு தலங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு ஆலயத்தில் மதகுரு மற்றும் உபயகாரருடன் மக்களின் பங்கு பற்றுதல் இன்றி ஆலய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

திருமண மண்டபங்களை பொறுத்தவரை ஏற்கனவே தேசிய மட்ட சுகாதார  வழி காட்டல்களுக்கமைய  திருமண மண்டபங்களை இயங்கலாம் என்றும் கலந்து கொள்வோரின் விபரப் பட்டியல் உட்பட விவரங்களை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல சினிமா திரையரங்கு தொடர்பிலும் ஆராயப்பட்டது யாழ் மாவட்டத்தில் 25 வீத பங்களிப்புடன் சினிமா திரையரங்கில் செயற்படுத்துவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது

பொதுமக்கள் தேவைக்கு ஏற்றவாறு உங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யலாம் எனினும் தற்போதைய நிலையில் அரசானது பாரிய முடக்க நிலை அறிவிக்காது எனக் கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் ஒரு அசௌகரியத்தை எதிர்கொள்ளாத வண்ணம்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

எனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்தகால அனுபவங்கள் இருக்கின்றன அவற்றை  பின்பற்றி  செயற்படல் நல்லது. ஆகவே பொதுமக்கள்  பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: