ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 5 பெண்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021

2010 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பெண்களில் ஐந்து பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக டயகம பகுதிக்கு சென்றுள்ள பொலிஸ் குழுக்களினால் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மேலும் ஐந்து பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பயணியாற்றிய நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிஷாலினி என்ற 16 வயதான சிறுமி தொடர்பில் நியமிக்கப்பட்ட இரண்டு பொலிஸ் குழுக்கள் இன்றையதினமும் ஹட்டன் – டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெத்துள்ன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த சிறுமியின் சரீரத்தை மீளத் தோண்டி, இரண்டாம் பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக விசேட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று நியமிக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய விஞ்ஞானப்பிரிவின் பேராசிரியர் ஜீன் பெரேரா தலைமையில் குறித்த 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு நாளையதினம் டயகம பகுதிக்கு சென்று, அங்கு புதைக்கப்பட்டுள்ள ஹிஷாலினியின் சரீரத்தை மீளத் தோண்டி எடுக்கவுள்ளது. இதன்போது துறைசார்ந்த நிபுணர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

ஹிஷாலினியின் சரீரம் மீளத்தோண்டப்பட்டு அவர் மரணித்த விதம், துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை, அசம்பாவிதம் இடம்பெற்ற காலகட்டம், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா போன்ற பல விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: