ரிஷாட் பதியுதீன் சிறைக்குள் தொலைபேசி கண்டுபிடிப்பு!

Friday, September 3rd, 2021

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ள சிறை அறையில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீன் அடைக்கப்பட்டிருந்த சிறையை தலைமை ஜெயிலரும் மற்றொரு சிறைக்காவலரும் நெருங்கியபோது, அவர் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை அவதானித்ததாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பின்னர் ரிஷாட் பதியுதீன் குறித்த கைபேசியை வெளியே எறிந்தார் என்றும் குறித்த கைத்தொலைபேசி சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

சிறைச்சாலை கட்டளையின் கீழ் கைதி ஒருவர் தனது கைபேசியை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ள எனவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவியதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக, சிறைச்சாலை மருத்துவர் ஒருவருக்கு ரிஷாட் பதியுதீன் கொலை மிரட்டல்கள் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: