யாழ். மாவட்டம் இன்றும் கொரோனா ஆபத்தில் இருப்பதற்கு மக்களே காரணம் – இராணுவ தளபதி சுட்டிக்காட்டு!

Monday, July 19th, 2021

யாழ். மாவட்டத்தில் உருவாகிவரும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும் என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பருத்தித்துறை கொத்தணி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் –  மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது மிக கட்டாயமான ஒரு விடயமாகும். ஆனால் பெரும்பாலானோர் அதை மதிப்பதில்லை. அதற்கு யாழ்ப்பாணமும் விதிவிலக்கல்ல.

கொரோனா 1 ஆம், 2ஆம் அலைகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தபோது யாழ்.மாவட்ட மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். ஆனால் 3ஆம் அலையின்போது யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.

இதனால் யாழ்.மாவட்டத்தில் 3ஆம் அலையினால் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றது. பல இடங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாகி அந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் இருந்தும் தப்பி ஓடிய சிலர் வேறு பிரதேசங்களில் இரகசியமாக அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இராணுவம் மற்றும் பொலிஸார், சுகாதார பிரிவனரின் புலனாய்வு தகவல்கள் ஊடாக இந்த உண்மை அம்பலமாகியிருக்கின்றது.

எனவே யாழ்.மாவட்ட மக்கள் பெறுப்புடன் செயற்படவேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுக்காக போராடிவரும் முன்கள பணியாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி யாழ்.மாவட்ட மக்களுக்கே அதிகளவான தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். தொற்றாளர்கள் அதிகம் என்பதால்தான் அதிகளவு தடுப்பூசியை வழங்கியுள்ளோம். மேலும் வழங்கவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: