பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கு பொறிமுறை – சமூக நலன்புரி சபை துரித நடவடிக்கை!

Monday, December 26th, 2022

சமுர்த்தி உதவிகளை வழங்குவதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிமுறை இல்லாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.

மானியம் தேவைப்படாத பலர் நீண்டகாலமாக சமுர்த்தி மானியத்தை பெற்று வருவதனால் இப்பிரச்சினை நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சமுர்த்தி மானியத்திற்கு தகுதியான பலர் அந்த வாய்ப்பை இழந்துள்ளதுடன், சுகாதார திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட சில வறிய குடும்பங்கள் சமுர்த்தி மானியப் பட்டியல்களில் உள்வாங்கப்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

சமுர்த்தி மானியம் வழங்கும் முறைமை தொடர்பிலும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை அரசியல் தலையீடுகளை குறிப்பிடும் முறைப்பாடுகளாகும்.

அந்த நிலைமை நீண்ட காலமாக நடந்து வரும் ஒரு செயல்முறையின் விளைவாக இருப்பதால், கடுமையான கொள்கை மற்றும் ஒரு குறிப்பிட்ட முறையின் கீழ் சரியான சமுர்த்தி பயனாளிகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் உள்ளது.

சமுர்த்தி மானியங்களை வழங்குவதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்யும் பொறுப்பு சமூக நலன்புரி சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, பொருத்தமான பயனாளிகளைத் தெரிவு செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சமுர்த்தி மானியம் பெற தகுதியான பயனாளிகள் மற்றும் சமுர்த்தி மானியம் பெற தகுதியற்ற நபர்களை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: