யாழ். போதனா மருத்துவமனையில் நகை திருடிய குற்றச்சாட்டு – ஒரு வழக்கில் பிணை: மற்றொரு வழக்கில் மறியல்

Thursday, January 3rd, 2019

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத்  திருவிழாக் காலங்களில் சங்கிலி அறுத்தவர் என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியைத் திருடிய வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

யாழ் போதனா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வருவோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. மருத்துவமனை வளாகத்தினுள் பொருத்தப்பட்டுள்ள மறைகாணிகளின் உதவியுடன் நகைகளைத் திருடிய பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து காணொலி ஆதாரத்துடன் சில வாரங்களுக்கு முன் ஒப்படைத்தனர்.

கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு வந்த வயோதிபப் பெண்ணொருவரிடம் இருந்து தங்கச் சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது. அது தொடர்பில் அந்த வயோதிப் பெண் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் முறையிட்டார். மறைகாணிகளைப் பரிசோதித்தபோது நகைகளை முன்னர் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணே மீண்டும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. பொலிஸாருக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டது.

காணொலியை ஆராய்ந்த யாழ்ப்பாணம் பொலிஸார் அந்த பெண்ணை முல்லைத்தீவில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலங்களில் சங்கிலி அறுத்ததையும் ஒத்துக்கொண்டார். அந்தச் சங்கிலி நகை வேலை செய்பவரிடம் விற்பனை செய்ததையும் சந்தேகநபர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நகை வேலை செய்பவரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார் சந்தேகநபரால் விற்பனை செய்யப்பட்ட சங்கிலி உருக்கப்பட்டு தங்கக் கட்டியாக மீட்டனர். அதனால் நகை வேலை செய்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடியமை மற்றும் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலங்களில் பெண்ணிடம் சங்கிலி அறுத்தமை என்று இரண்டு குற்றச்சாட்டுக்களுக்குத் தனித்தனியே வழக்குகளைப் பதிவு செய்தனர்.

சந்தேகநபரான பெண், அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் மூவர் மற்றும் நகை வேலை செய்பவர் என்று 5 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டனர்.

வழக்குகளை விசாரணை செய்த நீதிவான் சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் நகைத் தொழிலாளியையும் பிணையில் விடுவித்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திருடிய நகை சந்தேகநபரிடம் மீட்கப்பட்டதால் அந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. நல்லூர் ஆலயத் திருவிழாவில் பெண்ணிடமிருந்து அபகரித்த சங்கிலி உருக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் சந்தேகநபரான பெண்ணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் அன்ரனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.

Related posts: