யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் !

Wednesday, July 20th, 2016

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை யாழ்.மேல் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்திருந்ததால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற இந்தப் பிரச்சனை தென்பகுதியைச் சேர்ந்த இனவாதத் தரப்பினரால் பூதாகரமாக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் மூன்று அமைச்சர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்துவைத்துள்ளதாக அறிவித்தனர்.

இதற்கமைய மூடிவைக்கப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், வவுனியா வளாகம் மற்றும் கிளிநொச்சி வளாகம் என்பன கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி சுசீந்திரனை கோப்பாய் பொலிஸார் யாழ் மேல் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் அழைக்கப்பட்டு நேற்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சிசீந்திரன், பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

Related posts: