யாழ். பல்கலை பீடங்கள் இடைநிறுத்தம் !

Tuesday, October 31st, 2017

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்.ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞானப்பீடம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், குறித்த கைதிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கோரியும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் மூடி காலவரையற்ற போராட்டத்தினை நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்பட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரனுடன், பல்கலைக்கழக பீடாதிபதிகள் கூடி குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞானப்பீடம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்.பல்கலைக்கழக பிரதான வளாகத்திற்குள் அனைத்து மாணவர்களும் உட்புகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.விடுதியில் தங்கியுள்ள குறித்த பீட மாணவர்கள் நாளை பி.ப 4 மணிக்குள் விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: