யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னிலை!
Monday, February 27th, 2017
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக இடம்பெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தொழில்நுட்ப பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னணியில் உள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இவ்வாறான நிலையில் புதிய துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்த ஐந்து பேரில் மூன்று பேரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்வதற்காக யாழ். பல்கலைக்கழக பேரவைநேற்றுகாலை 10 மணியளவில் கூடியது.
யாழ். பல்கலைக்கழத்தின் தொழில் நுட்ப பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா, விஞ்ஞான பீடாதிபதி போராசிரியர் கே.விக்னேஸ்வரன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் ரீ.வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்தியக் கலாநிதி எஸ்.ரவிராஜ் மற்றும் உயர்பட்டப் படிப்புக்கள் பீடாதிபதி கே.மிகுந்தன் ஆகியோர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கூடிய பேரவையில் விண்ணப்பதாரிகள் ஐவரும் தமது பதவிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பற்றிய தங்கள் சிந்தனைகளை முன்னிறுத்தி பேரவை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த பின்னர் புதிய துணைவேந்தருக்கான தேர்தல் இடம்பெற்றது.
மொத்தம் 23 உறுப்பினர்களில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா 1 7 வாக்குகளையும், போராசிரியர் கே.விக்னேஸ்வரன் 11 வாக்குகளையும், பெற்று முறையே முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றிருந்தனர்.
இதன்போது பேராசிரியர் ரீ.வேல்நம்பி மற்றும் பேராசிரியர் ரவிராஜ் ஆகிய இருவரும் தலா 9 வாக்குகளை பெற்று சமநிலையில் இருந்தனர்.
இதனையடுத்து மூன்றாம் இடத்திற்கான தெரிவுக்காக மறு வாக்குப் பதிவு நடாத்தப்பட்டிருந்தது. இதில் பேராசிரியர் ரீ.வேல்நம்பி 14 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று பேராசிரியர்களது பெயர்களை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு ஊடாக ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
Related posts:
|
|