யாழ்ப்பாணத்தில் 15 : இலங்கையில் 233 – வலுவடையும் கொரோனா எண்ணிக்கை!

Wednesday, April 15th, 2020

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்து என பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையை நடத்திய சுவிஸ் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் முதல்கட்டப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மானிப்பாயைச் சேர்ந்த போதகர் ஒருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அதில் 8 பேருக்கு தொற்று உள்ளமை நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

அதுநேரம் நேற்றையதினம் அடையாளம் காணப்டபட்ட 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 233 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கிளிநொச்சி – முழுங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையுடன் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 61 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: