யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் – சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி தகவல்!

Wednesday, November 14th, 2018

சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்பிரகாரம் தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் பொலிஸாருக்கு சுட்டிக்காட்டப்பட்டன.

குறிப்பாகக் கடந்த சில நாள்களாகக் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்புப் பகுதியில் மணல் திருட்டு மிகவும் மும்மரமாக இடம்பெற்று வருவதாகவும் இதனால் அப்பகுதி மணல் வளம் அழிவடைந்து செல்வதாகவும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் கூட்டத்தில் எடுத்துக் கூறினார்.

அத்துடன் யாழ் மாநகரின் புறநகர் பகுதிகளை இலக்குவைத்து அண்மைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் கத்திமுனையில் கொள்ளையிடும் சம்பவங்களும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பில் பொலிஸார் பல நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்திருப்பதாகவும் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்தி சகல குற்றச்செயல்களையும் கட்டுக்குள் கொண்டுவர தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

Related posts: