யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு – ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Tuesday, September 28th, 2021

யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில் அன்றையதினம் தாளையடியில் நிர்மாணிக்கப்படும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டமும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

நயினாதீவு திட்டத்தின் மூலம் 5000 பயனாளர்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்படவிள்ளது.

இதேவேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் நீட்சியாக ஒரு இலட்சம் மக்களைப் பயனாளர்களாக உள்ளடக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டத்தின் கீழ், 284 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை அமைக்கும் திட்டம் உள்ளடக்கிய – யாழ் மாநகர விநியோக திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

யாழ் மாநகர விநியோகம் மற்றும் தாளையடி திட்டங்கள் 2023 ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படுவதுடன், இதனூடாக மூன்று இலட்சம் பயனாளர்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வகுக்கப்பட்ட அசல் மூலத்திட்டமானது – அந்த பகுதி விவசாயிகளால் எழுப்பப்பட்ட ஐயங்களினாலும், அந்த பகுதி அரசியல்வாதி ஒருவரின் இடையூறுகளினாலும் ஏற்கெனவே கைவிடப்பட்டுவிட்டதன் காரணமாகவே தாளையடி திட்டம் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: