யாழ்ப்பாணத்தில் உதயமானது பாரதிய ஜனதாக் கட்சி – தமிழ் மக்களே இலக்கு என்கிறார் கட்சியின் தலைவர் வி.முத்துசாமி!

Saturday, March 6th, 2021

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் முத்துசாமி கருத்து தெரிவிக்கையில் –

இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தக் கட்சி அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

அத்துடன் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.

அதேநேரம் தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன. எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளி விட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகாடியதாக உள்ளது.

எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.

எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடுமுழுவதும் வெவ்வேறு சமூகங்களில் இருந்து பிரதிநிதிகளை இணைத்து கொள்வதனாலேயே தேசிய கட்சி ஒன்றை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: